Published : 14 Mar 2014 09:31 AM
Last Updated : 14 Mar 2014 09:31 AM

ஹெச். ராஜாவுக்கு ஆதரவாக மோடி பிரச்சாரம்!- சிவகங்கை அல்லது ராமநாதபுரத்தில் போட்டி

சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் பாஜக துணைத் தலைவர் ஹெச்.ராஜா போட்டியிடக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை தொகுதியில் 1999 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனிடம் தோல்வியைத் தழுவினார். இந்த முறையும் சிவகங்கை, ராமநாதபுரத்தை தனது பட்டியலில் வைத்திருக்கிறது பாஜக. இந்த இரண்டில் ஒரு தொகுதியில் ராஜா போட்டியிடுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய அவர்கள், “இந்தமுறை ராஜா வெற்றி பெற்றால் நிச்சயம் மத்திய அமைச்சராக வருவார். இதை ஊகித்துக் கொண்டு கட்சிக்குள்ளேயே சிலர் அவருக்கு தடைகளை ஏற்படுத்தப் பார்த்தனர். ஆனால், அது பலிக்கவில்லை.

அகில இந்திய தலைவர்கள் ராஜா மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர். சிவகங்கை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் அவரது முதல் விருப்பம். ஆனாலும் ராமநாதபுரம் தொகுதியில் திமுக-வும் அதிமுக-வும் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதால், ராமநாதபுரத்தில் போட்டியிடச் சொல்லி பொது மக்கள் தரப்பிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்தும் ராஜாவுக்கு அழைப்புகள் வந்துள்ளன.

அவர் எங்கு போட்டியிட்டாலும் அங்கு பிரச்சாரம் செய்ய வருவதாக மோடி உறுதி அளித்திருக்கிறார்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, பாஜக-வின் தேநீருடன் விவாதம் பிரச்சாரத்தை காரைக்குடி பெரியார் சிலை அருகிலுள்ள கார்னர் டீ கடையில் ஏற்பாடு செய்கிறாராம் ராஜா. இதற்கும் மோடி இசைவு அளித்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வின்போது சுமார் 400 பேரை டீ கடையில் அமரவைத்து அவர்களோடு மோடி வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் கலந்துரையாடல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஹெச்.ராஜாவிடம் கேட்டபோது, ’’கட்சியில் எனது விருப்பத்தைச் சொல்லி இருக்கிறேன். முடிவை தலைமை அறிவிக்கும். வெள்ளிக்கிழமை முடிவு தெரியும்’’ என்று மட்டும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x