Published : 29 May 2015 01:14 PM
Last Updated : 29 May 2015 01:14 PM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று சந்தித்து பேசினார்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினரான வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்த தொகுதி காலியானது. எனவே அந்த தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தலை திமுக , விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடவுள்ளார்.
இந்த சூழலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் முடிவை தெரிந்துகொள்ளும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்று சந்தித்து பேசினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு தமிழிசை கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று (நேற்று) காலை சந்தித்து ஆலோசனை செய்தோம். தனது கட்சி நிர்வாகக் குழுவையும் தொண்டர்களையும் கலந்தாலோசித்துவிட்டு ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு முடிவை சொல்வதாக அவர் கூறினார்.
அவரைத் தொடர்ந்து தேஜ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்துவோம். பின்னர் எங்கள் கட்சியின் உயர்மட்டக்குழு மற்றும் தேசிய தலைமையுடன் பேசுவோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி 2 அல்லது 3 நாட்களில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT