Published : 13 May 2015 07:35 AM
Last Updated : 13 May 2015 07:35 AM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பூட்டியிருந்த கடையில் திடீர் தீ விபத்து

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பூட்டியிருந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த பயணிகள் தகவல் கொடுத்ததால், ரயில்வே போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 4 மற்றும் 5-வது நடைமேடையின் நடுப்பகுதியில் சிகேகே கேட்டரிங் சர்வீஸ் என்ற கடை இருக்கிறது. இதில் குடிநீர் மற்றும் நொறுக்கு தீனி பொருட்கள் விற்கப்பட்டன. கடந்த ஒரு மாதமாக இந்த கடை பூட்டப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், திடீரென நேற்று மதியம் 1.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. ரயில் நிலையம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. அருகில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடி ரயில்வே அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பூட்டியிருந்த கடையில் இருந்த ஃபிரிட்ஜில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இந்திய ரயில்வே பயணிகள் நல சங்கத்தின் பொது செயலாளர் கேன் ஐயர் கூறுகையில், ‘‘சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் இருந்த பூட்டியுள்ள கடையில் தீ பிடித்துள்ளது. பூட்டியிருக்கும் கடையில் என்ன இருக்கிறது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகளோ, போலீஸாரோ சோதனை நடத்தியிருக்க வேண்டாமா? எனவே, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x