Published : 12 Apr 2015 11:52 AM
Last Updated : 12 Apr 2015 11:52 AM

கோயம்பேடு - எழும்பூர் இடையே மெட்ரோ ரயில் சுரங்க பாதை தோண்டும் பணி நிறைவு: ரயில் பாதை, சிக்னல்கள் அமைக்கும் பணி தீவிரம்

கோயம்பேடு - எழும்பூர் இடையே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க வழிப்பாதை தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து ரயில் பாதை, சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், 24 கி.மீ.க்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்கவழிப் பாதையாகவும், 21 கி.மீ.க்கு (13 ரயில் நிலையங்கள்) உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு ஆலந்தூர் இடையே உயர்மட்டப் பாதை பணிகள் முடிந்து பாதுகாப்பு சோதனை ஓட்டங்கள் நடந்து வருகின்றன. மற்றொரு வழித்தடத்தில், முதல்கட்டமாக ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்பட்டன. இதையடுத்து, படிப்படியாக கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரை சுமார் 8 கி.மீ தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மொத்தம் 24 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை மூலம் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்காக சுரங்கப் பாதைகள் தோண்டும் பணிகள் 5 கட்டங்களாக நடந்து வருகின்றன. முதல்கட்டமாக ஷெனாய்நகர் திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது.

இதையடுத்து, கோயம் பேட்டில் இருந்து எழும்பூர் வரை 8 கி.மீ தொலைவுக்கு 10 முதல் 20 மீட்டர் ஆழத்தில் 6 மீட்டர் அகலத்தில் சுரங்கம் தோண்டப்பட்டது. மொத்தம் 7 இயந்திரங்கள் மூலம் சுங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, அந்த வழித்தடத்தில் ரயில்பாதை, சிக்னல்கள் மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்துவரு கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த வழித் தடத்தில் சராசரியாக 75 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. மீதமுள்ள 25 சதவீத பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x