Published : 19 Apr 2015 09:17 AM
Last Updated : 19 Apr 2015 09:17 AM

திருப்பதி என்கவுன்ட்டரில் பலியான 6 தமிழர்களின் உடல்கள் மறு பிரேதப் பரிசோதனை

உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் வருகை

*

ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 6 தொழிலாளர்களின் உடல்களை, 3 பேர் அடங்கிய உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவர்கள் குழு நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மறு பிரேதப் பரிசோதனை செய்தது.

ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 20 பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 12 பேர். இவர்களில் வேட்டகிரிபாளையம் கிராமம் சசிக்குமார், முருகன், பெருமாள், காந்தி நகர் கிராமம் மகேந்திரன், முருகாப்பாடி கிராமம் முனுசாமி, மூர்த்தி ஆகிய 6 பேரது உடல்கள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பாதுகாப் புடன் வைக்கப்பட்டன.

இதற்கிடையில், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மறு பிரேதப் பரிசோதனை கேட்டு 6 குடும்பத்தினரும் தனித் தனியே வழக்கு தொடர்ந்தனர். அவர்களது சார்பில் பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு ஆஜரானார். வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், 6 தொழி லாளர்களின் உடல்களை உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் மறு பிரேதப் பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை மூடி முத்திரையிட்டு வரும் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதையடுத்து உஸ்மானியா பல்கலைக்கழக சிறப்பு மருத்துவர்கள் தக்யுதீன்கான், அபிஜித் சுபேதர் மற்றும் ரமணமூர்த்தி ஆகிய 3 பேர் அடங்கிய மருத்துவக் குழு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மதியம் 2 மணிக்கு வந்தது. இவர்களுடன் 9 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவினரும் வந்தனர். சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் மறு பிரேதப் பரிசோதனையை பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கினர். மறு பிரேதப் பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 6 உடல்களையும் பிரேதப் பரிசோதனை செய்து முடிக்க இரவு 8 மணி ஆனது.

போலீஸ் பாதுகாப்பு

மறு பிரேதப் பரிசோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எஸ்.பி. முத்தரசி தலைமையில் 200 போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். என்கவுன்ட்டரில் பலியான 6 தொழிலாளர்களின் குடும் பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் என சுமார் 75 பேரை, புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் போலீஸார் அமர வைத்திருந்தனர்.

மறு பிரேதப் பரிசோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எஸ்.பி. முத்தரசி தலைமையில் 200 போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். என்கவுன்ட்டரில் பலியான 6 தொழிலாளர்களின் குடும் பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் என சுமார் 75 பேரை, புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் போலீஸார் அமர வைத்திருந்தனர்.

வழக்கறிஞர் தகவல்

இதுகுறித்து வழக்கறிஞர் பாலு கூறும்போது, “மறு பிரேதப் பரிசோதனையின் மூலம் இறப்புக்கான உண்மை யான காரணம் தெரியவரும். முதலில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் ஆந்திர அரசு தாக்கல் செய்யவில்லை. அப்படியானால் அது எவ்வாறு நடந்து இருக்கும் என்று யூகித்துகொள்ள முடியும். சிறப்பு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரங்களையும் ஆந்திர அரசு தெரிவிக்கவில்லை. கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதால், இழப்பீடு மற்றும் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடர உள்ளோம். மறு பிரேதப் பரிசோதனையில் சந்தேகம் எழுந்தால், ஆந்திர நீதிமன்றத்தின் உதவியை நாடுவோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x