Published : 01 Apr 2015 11:04 AM
Last Updated : 01 Apr 2015 11:04 AM

மத்திய பல்கலை. கட்டுமான விபத்து: சிபிஐ குழு ரகசிய விசாரணை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டுமானம் இடிந்த விபத்து குறித்து சென்னையிலிருந்து வந்த சிபிஐ குழுவினர் நேற்று ரகசிய விசாரணை நடத்தினர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில், மத்திய பொதுப்பணித் துறை கட்டப்பட்டு வரும் விருந்தினர் மாளிகையின் போர்டிகோ கட்டுமானம் மார்ச் 29-ம் தேதி இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து, குறித்து போலீஸார், டிஇசி இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் என்ற நிறுவன பொறியாளர்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழக கட்டுமான விபத்து குறித்து, சென்னையிலிருந்து நேற்று வந்த சிபிஐ இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு, விபத்து நடந்த கட்டிடத்தைப் பார்வையிட்டு, விபத்து நடந்தபோது பணிபுரிந்த தொழிலாளர்களிடம் ரகசிய விசாரணை நடத்தியதாகவும், இடிந்து விழுந்த கட்டுமானத்தின் மாதிரிகளை சேகரித்து எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சி.பி.டபிள்யு.டி. குழு ஆய்வு

இதேபோல, பெங்களூருவிலிருந்து வந்த சி.பி.டபிள்யு.டி. தென் மண்டல சிறப்பு டைரக்டர் ஜெனரல் வி.கே.சர்மா தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த கட்டிடத்தைப் பார்வையிட்டு, பல்கலைக்கழக நிர்வாக நிர்வாகம், அங்கு பணிபுரியும் சி.பி.டபிள்யு.டி. பொறியாளர்கள், ஒப்பந்த நிறுவன நிர்வாகிகள், கட்டுமானத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x