Published : 30 Apr 2015 10:25 AM
Last Updated : 30 Apr 2015 10:25 AM

ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற ‘ஒரே ஒரு ஊரிலே..’ - கிராம வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளும் புதிய தேடல்

பள்ளி, வீடு என நகர வாழ்க்கையிலேயே உழன்றுவரும் மாணவ- மாணவிகள், கிராம மக்களைச் சந்தித்து அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளச் செய்யும் நிகழ்வுக்கு திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தப் பள்ளி சார்பில் ‘வெளிக் காற்று உள்ளே வரட்டும்’ என்ற 6 நாள் பயிலரங்கம் ஏப். 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கருத் தரங்கில் பங்கேற்று கருத்துரையாற்றி வருகின்றனர்.

பயிலரங்கின் ஒரு பகுதியாக திருச்சி அருகேயுள்ள திருவளர்ச் சோலை பகுதியில் கிராம மக் களைச் சந்தித்து அவர்களது வாழ்க்கை முறையை மாணவ- மாணவிகள் நேரடியாக அறிந்து கொள்ளும் ‘ஒரே ஒரு ஊரிலே..’ என்ற நிகழ்வு நடைபெற்றது.

இதன்படி, நேற்று காலை 9 மணிக்கு மாணவ- மாணவிகள் 160 பேர், ஆசிரியர்கள் 20 பேர், திருவளர்ச்சோலை கிராமத்துக்கு (மாநகராட்சிப் பகுதியாக இருந்தாலும் கிராமம்தான்) சென்றனர்.

அந்தக் கிராமத்தில் உள்ள முக்கிய இடங்கள் குறித்து பள்ளி நிர்வாகம் ஏற்கெனவே தயாரித்த அளித்த வரைபடம், புகைப்படங்கள் ஆகியவற்றுடன், தலா 6 பேர் அடங் கிய குழுக்களாகப் பிரிந்த மாணவ- மாணவிகள், வீடுதோறும் சென்று மக்களிடம் பேசி, அவர்களது வாழ்க்கை முறை, உணவு, தொழில், குழந்தைகள், படிப்பு ஆகியவற்றை கேட்டறிந்து பதிவு செய்து கொண்டனர்.

இதுகுறித்து இந்த நிகழ்வுக்கு வித்திட்டவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற பேராசிரியர் ச. ரங்கசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வகுப்பறையைத் தாண்டி மிகப் பெரிய உலகம் உள்ளது என்பதை மாணவ- மாணவிகள் உணர்ந்து கொள்ளவே இந்த ஏற்பாடு. வாழ்க் கையில் வெற்றியடைய நாம் வாழும் சமுதாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பிளஸ் 2 வகுப்பு செல்லவுள்ள மாணவ- மாணவிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மாணவ- மாணவிகளுடன் நானும் சில வீடுகளுக்குச் சென்றேன். தாங்கள் அறிந்ததை மக்களிடம் மாணவர்கள் சொல்கின் றனர். தங்களுக்குப் புரியாததை மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

இந்த நிகழ்வோடு மட்டுமன்றி, கிராமத்தின் பிரச்சினைகள் குறித்து மக்கள் தெரிவித்தவற்றை, கிராம முக்கியஸ்தர்களுடனும் மாணவ- மாணவிகள் கலந்துபேசுவார்கள். மேலும், பள்ளியில் நடைபெறும் விவாத அரங்கில் தாங்கள் பார்த்தவற்றை, கேட்டவற்றை மாணவ- மாணவிகள் குழு பதிவு செய்து, விவாதிக்கும் என்றார்.

இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த மாணவிகள் ரம்யா, ரத்னா ஆகி யோர் கூறும்போது, ‘நாங்கள் கிராமத்துக்கே வந்ததில்லை. கிராமங்களில் உள்ள மக்கள் மிகவும் அன்பாக பேசுகின்றனர். இங்குள்ளவர்களுக்கு வசதிகள் மிகவும் குறைவுதான் ஆனாலும், மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

நகரங்களில் இதுபோன்று வீடுகளுக்குச் சென்றால், பூட்டிக் கொண்டு பதில்கூட சொல்ல மாட்டார்கள். ஆனால், இங்கு அப்படி யில்லை. நாங்கள் டீ கடை வைத் திருக்கும் பெண்ணை சந்தித்தோம். எல்லோரும் டீ சாப்பிடுங்க என அவர் அழைத்தார். இந்த அன்பு எங்களுக்கு பிடித்திருக்கிறது.

கடும் வெயிலையும் பொருட் படுத்தாமல் இங்கு மாணவ- மாணவி கள் மகிழ்ச்சியாக விளையாடுகின் றனர். நகர வாழ்க்கையில் நாங்கள் இவற்றையெல்லாம் இழக்கிறோம். பேருந்து வரவில்லை, கழிப்பிடம் இல்லை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினைகள் குறித்தும் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு கிராம மக்களைப் பற்றிய எங்களது எண்ணங்கள் முழுமை யாக மாறிவிட்டன’ என்றனர். இந்த நிகழ்வில் எழுத்தாளர் ஞாநி, பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி, பள்ளி முதல்வர் க. துளசிதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x