Published : 18 Apr 2015 09:13 AM
Last Updated : 18 Apr 2015 09:13 AM
கரூர் அருகே அரசுப் பேருந்து தீப் பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணி கள் அனைவரும் உயிர் தப்பினர்.
சேலத்தில் இருந்து கரூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 26 பேர் பயணம் செய்தனர். ஓட்டுநர் மோகன்(30) பேருந்தை ஓட்டினார். கரூர் அருகேயுள்ள தளவாபாளையம் பகுதியில் வந்தபோது, திடீரென அந்தப் பேருந்தின் முன்பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணிகளை கீழே இறக்கிவிட்டார்.
அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில், திடீரென பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த வேலாயுதம்பாளையம் மற்றும் புகழூர் காகித ஆலை தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பேருந்தின் இருக்கைகள் மற்றும் மேல்பகுதி தீயில் எரிந்து நாசமானது. விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு லாரி எரிந்து நாசம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளுடன், லாரியும் எரிந்து நாசமானது.
சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையிலிருந்து பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளை ஏற்றிய லாரி அசாம் மாநிலத்துக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. திருச்சி அருகேயுள்ள துறையூரைச் சேர்ந்த த.சேகர்(44) லாரியை ஓட்டினார்.
விராலிமலை அருகே நேற்று அதிகாலை சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்த லாரி, சாலையின் மையத்தில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. உடனே, லாரியில் இருந்த பட்டாசுகளில் தீப்பற்றியது. இதில், லாரியும், அதிலிருந்த பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளும் முற்றிலுமாக எரிந்தன.
தகவலறிந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். காயமடைந்த ஓட்டுநர் சேகர் விராலிமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து காரணமாக திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT