Published : 10 Apr 2015 05:52 PM
Last Updated : 10 Apr 2015 05:52 PM
ஆந்திராவில் 20 தமிழர்களை படுகொலை செய்ததை நீதிவிசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஏப்ரல் 13-ல் பாமக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆந்திராவில் கட்டிட வேலைக்கு சென்ற அப்பாவி தமிழர்கள் 20 பேரை அம்மாநிலக் காவல்துறையினர் கடத்திச் சென்று காட்டில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஆந்திரக் காவல்துறை சார்பில் அளிக்கப்படும் விளக்கம் ஏற்க முடியாததாகும். இதுகுறித்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றமும் காவல்துறையின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.
அப்பாவித் தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதால் இதுகுறித்த உண்மைகளை ஆந்திரக் காவல்துறை மூடி மறைக்கவே முயலும். எனவே, இந்த படுகொலைகளின் பின்னணியில் ஒளிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டுமானால் இதுகுறித்து பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது மத்திய புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரணை நடத்துவதே சரியானதாக இருக்கும்.
அதுமட்டுமின்றி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இருமாநில அரசுகளும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 13-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT