Published : 01 Apr 2015 08:43 AM
Last Updated : 01 Apr 2015 08:43 AM

ஆலங்குளம் சிமென்ட் ஆலையை மூடுவதற்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆலங்குளம் சிமென்ட் ஆலையை மூடுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தலைமைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ். ராதா கிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் 1970-ம் ஆண்டில் அரசு சிமென்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இதில், உள்ளூர் மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், சிமென்ட் ஆலையை மூடுவதற்கும், தொழிற்சாலையையும், அதன் சொத்துகளையும் தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வரும் நிலையில், சிமென்ட் ஆலையை மூடக் கூடாது என்று தலைமைச் செயலர், தொழிற்துறை செயலர் ஆகியோருக்கு பிப். 12-ல் மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, ஆலங்குளம் சிமென்ட் ஆலையை தொடர்ந்து இயங்கச் செய்யவும், ஆலையில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

மேலும், சிமென்ட் ஆலையை மூடவும், சொத்துகளை தனியாருக்கு விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் புகழேந்தி, ‘ஆலங்குளம் சிமென்ட் ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதால் மூட முடிவு செய்யப்பட்டது. அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’ என்றார்.

இதையடுத்து, மனுவுக்கு தலைமைச் செயலர், தொழிற்துறை செயலர், ஆலங்குளம் சிமென்ட் ஆலை மேலாண்மை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர். பின்னர், விசாரணையை வருகிற 15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x