Published : 02 Apr 2015 09:58 AM
Last Updated : 02 Apr 2015 09:58 AM
சுகாதாரத்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 8,945 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
இந்தியாவிலேயே முதல்முறையாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கியது தமிழகம்தான். இந்த வாரியம் மூலம் இதுவரை 6,923 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாரியத்தை ஏற்படுத்து வதற்கு முன்பாக இடஒதுக்கீடு முறையில் பணியமர்த்தப்பட்ட 2,022 பணியாளர்கள் உட்பட கடந்த 4 ஆண்டுகளில் 8,945 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
காலிப் பணியிடங்கள், பணி ஓய்வு மூலம் ஏற்பட்டவை அல்ல. புதிதாக உருவாக்கப்படும் தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதியதாக உருவாக்கப்படும் பணியிடங்களால் உருவானவை.
முதுநிலை மருத்துவர்கள் தேர்வை எளிமைப் படுத்தும் விதமாக, ஆன்லைனில் விண்ணப்பிக்க செய்து, நேரடியாக பணி ஆணை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் இதுவரை 433 ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மூலம் தொலைநோக்கு திட்டம் 2023-ன்படி காலிப்பணியிடம் இல்லாத துறையாக சுகாதாரத்துறை விளங்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT