Published : 02 May 2014 12:20 PM
Last Updated : 02 May 2014 12:20 PM

மின் கோபுரம், டிரான்ஸ்பார்மர் அமைக்க இடமின்றி மின் வாரியம் திணறல்: அரசுத் துறைகளின் காலி நிலங்களை பயன்படுத்த திட்டம்

மின் கோபுரங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் அமைக்க இடம் கிடைக்காததால், தமிழக மின் வாரியத்தின் மின் பாதை மற்றும் தரம் உயர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குறைந்த மின் அழுத்தம் மற்றும் அறிவிக்கப்படாத மின் தடை பிரச்சினை தீருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றால் தமிழகத்தின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, புதிய மின் உற்பத்தி திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஏற்கெனவே கட்டுமானப் பணியில் இருந்த மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து படிப்படியாக மின்சார உற்பத்தி தொடங்கப்படுகிறது.

மேலும் வடசென்னை, தூத்துக்குடி மற்றும் மேட்டூர் புதிய மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொண்டு வரவும், புதிதாக கூடுதல் மின் பாதைகள் அமைக்கவும், விநியோக டிரான்ஸ்பார்மர் அமைக்கவும் மின் வாரியம் பணிகளைத் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தமிழக மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு கூடலூர், மேட்டுப்பாளையம், சூலூர், கோத்தமங்கலம், ஈங்கூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியே உயர்மட்ட மின் பாதை மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதேபோல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட புதிய விநியோக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. பல இடங்களில் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளின் முன்பு, டிரான்ஸ்பார்மர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உயர் மட்ட மின் பாதைகள் அமைக்க, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களைத்தான் தேர்வு செய்கிறோம். ஆனால் தங்கள் நிலங்களுக்கு மேலே மின் பாதை செல்ல, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மின்சார சட்டப்படி ஒரு இடத்தில் மின் கோபுரம், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் பாதை இருந்தால், அந்த இடத்தை உரிமையாளர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு எடுக்க முடியாது. அந்த இடம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவைப்பட்டால், அவர்கள் மின் வாரியத்துக்கு, மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுத்தால் மட்டுமே, அங்கிருந்து மின் உபகரணங்களை அப்புறப்படுத்த முடியும். அதனால்தான், பொது மக்கள் தங்கள் இடங்களுக்கு அருகில் மின் வாரிய பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழகம் முழுவதும் தற்போது அரசுக்கு சொந்தமான பயனற்ற இடங்களை அடையாளம் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். அந்த இடங்களுக்கு அரசுத் துறைகளில் அனுமதி பெற்று மின் வாரிய தரமுயர்த்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x