Published : 14 Apr 2015 11:36 AM
Last Updated : 14 Apr 2015 11:36 AM

உதவி வேளாண் அலுவலர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் ஏ.பாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தமனு:

தமிழகத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், உதவி வேளாண்மை அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 417 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 30.1.2015 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில் வேதியியல், இயற்பியலில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு தனி வெயிட்டேஜ் மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. இது நியாயமற்றது.

எனவே, வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு தனி வெயிட்டேஜ் மதிப்பெண் சலுகை வழங்கி நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்த பின், உதவி வேளாண் அலுவலர் பணி நியமனங்கள் அனைத்தும், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்படும் என உத்தரவிட்டார். பதில் மனு தாக்கல் செய்ய வேளாண்மைத் துறை செயலாளர், இயக்குநர் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x