Published : 03 May 2014 04:10 PM
Last Updated : 03 May 2014 04:10 PM

இந்தியாவை சீர்குலைக்க இலங்கை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்: இல.கணேசன்

இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இலங்கையிலிருந்து தமிழகம் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்கள் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம்சாட்டினார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன் கூறியதாவது: "இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தெரிவித்தேன். சில தினங்களுக்கு முன்பாக பயங்கரவாதி ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டிருப்பது நான் சொன்ன குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபணமாகியுள்ளது.

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கான முயற்சியை மத்திய - மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் நடந்த குண்டு வெடிப்பு மோடியை குறி வைத்து மோடியின் பிரசாரத்தின் போது பீதியை உருவாக்க வேண்டும் என்பதற்காக நடந்த சதித் திட்டமாக பாஜக கருதுகிறது.

மோடி பிரதமரானவுடன் பயங்கரவாத பயிற்சி இலங்கையில் நடைபெறுவது தடுக்கப்படும். தேச விரோத சக்திகளை ஒடுக்கும் போது மத்திய, மாநில அரசுகள் என்றோ மாறுப்பட்ட கருத்துக்களை கொண்ட கட்சிகள் என்றோ, பாகுபாடுகள் இன்றி சேர்ந்து செயல்படவேண்டும். இது போன்ற வெடிகுண்டு தாக்குதல் இனிமேல் நடக்கக்கூடாது.

பாஜக அணியின் மீது மக்கள் கொண்டிருக்கின்ற ஆதரவு தேர்தல் முடிவுகளில் தெரியும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும் பணப்பட்டுவாடாவை தடுக்கின்ற நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் இருந்தன. ஆணையத்தின் தேர்தல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டால் இன்னும் சிறப்பாக தேர்தல் நடத்த முடியும்". இவ்வாறு இல. கனேசன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x