Published : 25 Mar 2015 01:20 PM
Last Updated : 25 Mar 2015 01:20 PM
2015-16 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைத் தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் கூறும்போது, "காவேரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினைகளில் இந்த அரசு மேற்கொண்ட அயராத போராட்டங்களும், பெற்ற வியத்தகு வெற்றிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டிட இந்த அரசு முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது.
காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காவேரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு, சட்டத்திற்குப் புறம்பாக அணை கட்ட எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க ஒரு இடைக்கால மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணைகட்ட எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைத் தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க உரிய நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து எடுக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT