Published : 02 Mar 2015 10:35 AM
Last Updated : 02 Mar 2015 10:35 AM

எம்.ஆர்.எஃப். தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை திருவொற்றியூரில் உள்ள எம்.ஆர்.எஃப். தொழிற்சாலை யில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுடன் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் ஆலை நிர்வாகம் கையெழுத்திட வேண்டும். தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் குறைப்பது, தற்காலிக பணி நீக்கம் செய்வது, நிரந்தர பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு எதிரான இந்த போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்த ஆலை நிர்வாகம் மறுத்து வருகிறது. எம்.ஆர்.எஃப். தொழிற் சாலையில் மொத்தம் 1,100 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அனைத்து கோரிக் கைகளையும் நிறைவேற்றுவதற்காக ஆண்டுக்கு ஓரிரு கோடிகள் மட்டுமே செலவாகும்.

ஆனால், ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்டி, அதில் ரூ.500 கோடியை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விளம்பரதாரர் கட்டணமாக வழங்கியுள்ள எம்.ஆர்.எஃப். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் முதலீட்டில் பலூன் தொழிற்சாலையாக தொடங்கப்பட்ட எம்.ஆர்.எஃப். நிர்வாகம், இப்போது ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதன் தொழிலாளர்கள்தான் காரணம் என்பதை மறந்துவிட்டு, அவர்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவது ஏற்றுக்கொள் ளத்தக்கதல்ல.

இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல. எம்.ஆர்.எஃப். ஆலை நிர்வாகத்தையும், தொழிற்சங்கங்களையும் அழைத் துப் பேசி சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x