Last Updated : 02 May, 2014 10:00 AM

 

Published : 02 May 2014 10:00 AM
Last Updated : 02 May 2014 10:00 AM

மின்னல் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?- கோடை மழையின்போது கவனிக்க வேண்டியவை

மதுரையில் மின்னல் தாக்கி மருத்துவ மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோடை மழைக்காலங்களில் மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்று இயற்பியல் துறை பேராசிரியை விளக்கமளித்துள்ளார்.

புதுவை மாநிலம் புதுப்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது ஒரே மகன் கிரண்ராஜ் (21) மதுரை மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார்.

புதன்கிழமை மாலை மழையில் நனைந்தபடி மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி அவர் இறந்தார்.

உடல் பரிசோதனை

“வழக்கமாக நிற்கிற, நடக்கிற மனிதனை மின்சாரம் தாக்குகிற போது, தோள்பட்டை வழியாக மின்சாரம் பாய்ந்து ஒரு நொடிக் குள் இதயத்தை நிறுத்திவிட்டு கால் பாதம் வழியாக மண்ணுக் குள் ஊடுருவி விடும். மின்சாரம் அல்லது மின்னல் தாக்கி இறந்தவர்கள் அத்தனை பேரின் உடலிலும் இன்லெட், அவுட்லெட் துவாரங்கள் ஏற்பட்டிருக்கும். குறைந்தபட்சம் உடலில் உள்ள ரோமங்களாவது கருகியிருக்கும். இறந்த மாணவரின் உடலைப் பரிசோதனை செய்தபோது, அவரது இடது கையில் மின்னல் தாக்கியதற்கான அடையாளம் இருந்தது. கால் விரல் இடுக்கிலும் சிறு துளை தெரிந்தது. மற்றபடி உடல் கருகியதற்கான எந்த அடையாளமும் இல்லை. பின்னந்தலையில், பலத்த அடிபட்டு ரத்தம் வெளியேறியிருந்தது. எனவே, அந்த மாணவர் மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.

மின்னல் தாக்கினால், முதலில் இதயம்தான் செயல் இழக்கும் என்பதால் இதயத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறோம்” என்றார் மருத்துவப் பேராசிரியர் ஒருவர்.

கோடை மழை என்றாலே, இடியும் மின்னலும் இல்லாமல் பெய்யாது என்பார்கள். மின்னல் தாக்குதல் பற்றியும், அதில் இருந்து தற்காத்துக் கொள்வது பற்றியும் மதுரை பாத்திமா கல்லூரி இயற்பியல் பேராசிரியை எம்.ராகத்திடம் கேட்டபோது அவர் கூறியது: எளிதான வார்த்தையில் சொல்வதானால், மின்னல் என்பது மின்சாரம்தான். இது பெரும்பாலும் கோடை மழைக்காலங்களில்தான் ஏற்படும்.

காரணம், வெப்பம் அதிகமுள்ள காலங்களில்தான், வெப்பக் காற்றானது கருந்திரள் மேகங்களை உருவாக்கும். காற்று வீசும்போது, இந்த மேகத்துக்குள் இருக்கிற நீர்த்துகள்களும், பனிக்கட்டித் துகள்களும் உரசும்போது மேகத் துக்குள் எதிர்மின்சுமை அதிகமாகிவிடும்.

நம் பூமியின் மேற்பரப்பில் நேர்மின்சுமை அதிகம் இருக்கும். எனவே, அந்த எதிர்மின்சுமை கள், பூமியால் ஈர்க்கப்படுகிறது. பூமியை நோக்கி வேகமாக வரும் எதிர்மின்சுமை நேர்மின்சுமையைத் தொட்டவுடன், (பூமியில் இறங்கிய வுடன்) மின்னல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான வெப்பம் உருவாவதால், ஏற்படு கிற வெடிப்புச் சத்தமே இடி. இடியும் மின்னலும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும்கூட, ஒலி, ஒளி இரண்டின் வேகமும் வெவ்வே றானவை என்பதால், மின்னலைப் பார்த்த பிறகுதான் நம்மால் இடியைக் கேட்க முடிகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மின்னலைத் தடுக்க முடியாது. ஆனால், அதன் தாக்குத லில் இருந்து தப்பிக்க சில முன்னெச்சரிக்கைகளை கடைப்பி டிக்கலாம். இடியுடன் மழை பெய்வது போல் இருந்தால், வீட்டைவிட்டு வெளியே போவதைத் தள்ளிப் போடலாம். இடி, மின்னல் வேளைகளில் உயரமான மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர் கள் மற்றும் உலோகக் கம்பிகளின் அருகில் நிற்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மின்னல் வெட்டும் நேரத்தில் டி.வி. போன்ற மின்சாதனங்களைப் பயன் படுத்துவதும், தொலைபேசி, செல்போன் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் ஆபத்தை விளைவிக்கும் என்றார்.

இதுகுறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் சிவக் குமார் கூறியது: மின்னல் உடலைத் தாக்கும்போது, கண நேரத்தில் இருதயத்தின் செயல்பாட்டையே நிறுத்திவிடலாம். இது உடனே மரணத்தை விளைவிக்கும். சில நேரங்களில் இருதயத்துக்கு துடிப்பைத் தருகிற தசையில் மாற்றத்தை ஏற்படுத்தி, தாறு மாறாக துடிக்க வைக்கலாம். அதாவது, தரையில் விழுந்த மீனைப்போல இருதயத்தைத் துடிக்கச் செய்யலாம். இது இறப்புக்கு முந்தைய நிலை. மின்னல் எந்த இடத்தில், எப்படித் தாக்கியது என்பதைப் பொருத்து நோயாளிகள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மூளை அல்லது நெஞ்சுப் பகுதியை நேரடியாகத் தாக்கா மல், கை, கால்களில் மின்சாரம் தாக்கினால், காப்பாற்றி விடலாம். மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பு மனிதருக்கு மனிதர் வேறுபடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x