Published : 06 Mar 2015 04:14 PM
Last Updated : 06 Mar 2015 04:14 PM

ஜெயலலிதாவுக்காகவே புதிய பேருந்து, மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆன பிறகு அவரது கைகளால் தொடங்கி வைக்கப்படுவதற்காகத் தான் புதிய பேருந்துகள் சேவையும், மெட்ரோ ரயில் சேவையும் திட்டமிட்டே முடக்கப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரலாறு காணாத அளவுக்கு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பிறகும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து இழப்பில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேடும், ஊழலும் தான் இதற்குக் காரணம் என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். இந்தக் குற்றச்சாற்றுகள் உண்மை என்பதை உலகுக்கு உணர்த்துவதைப் போலத்தான் அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 6,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று 2011-12, 2012-13 ஆகிய ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 30.06.2014 வரையிலான 3 ஆண்டுகளில் 4,649 புதிய பேருந்துகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 8 கோட்டங்களுக்காக வாங்கப்பட்டு கூடு கட்டப்பட்ட 260 புதிய பேருந்துகள் 5 முதல் 8 மாதங்களாக இயக்கப்படாமல் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆன பிறகு அவரது கைகளால் தொடங்கி வைக்கப்படுவதற்காகத் தான் இப்பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

260 புதிய பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பும், கடன்சுமையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்தப் பேருந்துகள் போக்குவரத்துக் கழகங்களின் கையிருப்புப் பணத்திலிருந்து வாங்கப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு பேருந்தும் தலா ரூ.16 லட்சம் என்ற விலையில், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடம் ரூ.41.60 கோடியை கடனாகப் பெற்றுத் தான் வாங்கப்பட்டுள்ளன.

இதற்காக ஆண்டுக்கு 12.25% வீதம் ஒவ்வொரு மாதமும் ரூ.42 லட்சம் வட்டியாக செலுத்த வேண்டும். பேருந்துகள் வாங்கப்பட்டு குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஆனதாக வைத்துக் கொண்டாலும், இதுவரை ரூ.2.10 கோடி வட்டியாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.3500 வீதம் காலாண்டு வரியாக ரூ.9.10 லட்சம் செலுத்தப்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிர்ணயித்துள்ள ஆண்டுக்கு 4% தேய்மானத்தின்படி பார்த்தால், 5 மாதங்களில் ஏற்பட்ட தேய்மானத்தின் மதிப்பு ரூ.69.33 லட்சம் ஆகும். ஆக மொத்தம் புதிய பேருந்துகளை இயக்காததால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2.88 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதுதவிர ஒரு பேருந்துக்கு ஒரு நாளைக்கு ரூ.15,000 வீதம் 260 பேரூந்துகளுக்கு 5 மாதங்களில் ரூ.58.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர்களை வாங்கவும், உதிரி பாகங்களை வாங்கவும் பணம் இல்லாததால் இருக்கும் டயர்களை ரீ- ட்ரேட் செய்தும், தேய்ந்த உதிரிபாகங்களை தற்காலிகமாக சரி செய்தும் பேருந்துகளை இயக்கும்படி தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால் விபத்தும், பேருந்து பழுதடைந்து வழியில் நிற்பதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் இயக்குவதற்கு தயாராக இருக்கும் பேருந்துகளை, ஊழல் குற்றவாளி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தான் இயக்கவேண்டும் என்று தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் ஆட்சியாளர்களுக்கு எத்தகைய தண்டனை அளிக்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் படும் அவதியை உணராமல், ஊழல் குற்றவாளியை மகிழ்விக்கும் நோக்கத்துடன் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க சென்னை பெருநகரத் மெட்ரோ ரயில் நிறுவனம் தயாராக இருந்தும், அந்த சேவையையும் ஜெயலலிதா தான் தொடங்கி வைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு திட்டமிட்டே தாமதித்து வருகிறது. ஒட்டு மொத்த தமிழக அரசும் ஜெயலலிதா என்ற ஒற்றை மனிதருக்காகத் தான் செயல்பட்டு வருவதைப் போலவும், மக்கள் அனைவரும் அடிமைகள் தான் என்பதை போலவும் ஆட்சியாளர்கள் செயல்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. தமிழகத்தில் தயார்நிலையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் தொடங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x