Published : 11 Mar 2015 08:16 AM
Last Updated : 11 Mar 2015 08:16 AM
சின்னமலை விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. வரும் நவம்பரில் சோதனை ஓட்டம் முடிந்த பிறகு, டிசம்பரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 2 வழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவருகின்றன. வண்ணாரப் பேட்டையில் தொடங்கி உயர் நீதிமன்றம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 23.1 கி.மீ தூரத்துக்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ தூரத்துக்கு 2-வது பாதையும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. கடந்த 2009 முதல் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் கூறியதாவது:
2-வது வழித்தடத்தில் கோயம் பேடு ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரிகள் கொண்ட குழுவினர் வரும் 20-ம் தேதி வருகின்றனர். பாதுகாப்பு தொடர்பாக 4 நாட்களுக்கு இறுதிக்கட்ட ஆய்வு நடத்தவுள்ளனர்.
அடுத்தகட்டமாக சின்னமலை விமான நிலையம் (9 கி.மீ.), ஆலந்தூர் பரங்கிமலை (1 கி.மீ.) இடையே இறுதிக் கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். தண்டவாளம் அமைக்கப்பட்டு, சிக்னல் அமைத்தல், ரயில் நிலையங்கள் கட்டுமானம் என ஒட்டு மொத்தமாக 85 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. வரும் நவம்பரில் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
கோயம்பேடு ஆலந்தூர் இடையே முதல்முறையாக மெட்ரோ ரயில் இயக்குவதால், ஓராண்டு காலத்துக்கு சோதனைப் பணிகள் அவசியமாக இருந்தது. அடுத்தடுத்து வரும் பணிகளுக்கு அதே பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பொருட்கள், தொழில் நுட்பங்கள் பயன்படுத்துவதால், அதிகபட்சம் 2 மாதங்கள் வரை சோதனை பணிகள் நடத்தினால் போதும். வரும் நவம்பரில் முழுமை யான சோதனை முடிந்த பிறகு, சின்னமலை விமான நிலையம், ஆலந்தூர் பரங்கிமலை இடையே டிசம்பரில் ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT