Published : 09 May 2014 11:26 AM
Last Updated : 09 May 2014 11:26 AM

ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட்: பிரியதர்ஷினி புகாரால் நடவடிக்கை

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரில், "ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற்பதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயின்றபோது வருண்குமார் என்பவரை சந்தித் தேன். இருவரும் காதலித்தோம். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். இருவர் வீட்டிலும் எங்கள் முடிவை ஏற்றுக் கொண்டனர். 2010-ல் நடந்த தேர்வில் வருண்குமார் வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட செலவுகளை சமாளிக்க நான் எனது நகைகளை அடமானம் வைத்து வருண்குமாருக்கு பணம் கொடுத்தேன்.

2011-ம் ஆண்டு மே மாதம் ஐ.பி.எஸ். அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. நான் அவரைத் திருமணம் செய்துகொள்ள அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவரது பெற்றோரும் இதற்கு உடந்தையாக இருந்தனர். முடிவில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வருண்குமார் மறுத்துவிட்டார். வருண்குமார் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரியதர்ஷினி கூறியிருந்தார்.

பிரியதர்ஷினி புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வருண்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிரியதர்ஷிணி மனு தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

ஐ.பி.எஸ். பயிற்சி முடித்த வருண்குமார் சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் அருப்புக்கோட்டைக்கு மாற்றப்பட்டார். ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் சில நாட்கள் அவர் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி காலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வருண்குமார் சரண் அடைந்தார். அவரை சிறையில் 15 நாளுக்கு அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடனே வருண்குமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, வருண்குமாரை சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அபூர்வவர்மா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசு உத்தரவு ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்த வருண்குமாரிடம் கொடுக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x