Published : 21 Mar 2015 01:11 PM
Last Updated : 21 Mar 2015 01:11 PM

அதிமுக தலைமை அலுவலகமும்.. தொண்டர்கள் எதிர்பார்ப்பும்

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஒரு முறை சென்றுவந்தாலே போதும் அங்கு வந்து போகும் தொண்டர்கள் மனதை தற்சமயம் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது என்னவென்று எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில் அடிமட்டத் தொண்டர் முதல் கட்சியின் நிர்வாகிகள் வரை எல்லோரும் பேசும் பொருளாக 'தீர்ப்பு விவகாரமே' உள்ளது.

மார்ச் 18-ம் தேதியுடன் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த 5 மாதங்களில் ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளிவரவில்லை. அவ்வப்போது அமைச்சர்கள் சிலரையும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் மட்டும் பார்க்கிறார்.

சிறையில் இருந்து வந்த முதல் இரண்டு மாதங்களில் கட்சிப் பணிகளில் அவர் பெரியளவில் ஆர்வம் காட்டாவிட்டாலும், பின்னர் படிப்படியாக நிலைமை மாறியுள்ளது எனக் கூறப்படுகிறது.

குறிப்பிடும்படியாக, நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக எடுத்த நிலைப்பாட்டை விளக்குவது, தவறு செய்யும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பல்வேறு பணிகளை கடந்த சில வாரங்களில் அவர் செய்துள்ளார்.

அவரது நடவடிக்கைக்குள்ளானவர்களில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் அடங்குவார். இதுபோல் பல்வேறு நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த அதிரடி நடவடிக்கை, போயஸ் வீட்டிலேயே இருந்தாலும் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை தான் அறிந்துவைத்திருக்கிறேன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துவதாகவே உள்ளது எனலாம்.

ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் குறித்து பெயர் வெளியிட விரும்பாத எம்.எல்.ஏ. ஒருவர் கூறும்போது, "கடந்த சில மாதங்களாக கட்சி நிலவரத்தை தீவிரமாக கவனித்து வருகிறார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும்போது அதிமுகவில் நிர்வாக ரீதியில் எவ்வித சிறு சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதி செய்ய விரும்புகிறார்.

தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது இரண்டாம்பட்சம், ஆனால் அதற்கு முன்னதாக கட்சியில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தேர்தல் பணி மேற்கொள்ள சில தலைவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x