Published : 23 Mar 2015 11:32 AM
Last Updated : 23 Mar 2015 11:32 AM

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடினர். இதனால், ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் தப்பின.

பேராவூரணி அருகேயுள்ள கரம்பக்காட்டில் கெங்காதரபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், நகைகளை அடகுவைத்து கடன் பெற்றுள்ளனர்.

வங்கியில் உள்ள லாக்கரில் நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வங்கியில் கண்காணிப்புக் கேமரா மற்றும் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், வங்கியில் உள்ள கேமரா இணைப்புகளைத் துண்டித்து விட்டு, முன்பக்க கதவின் பூட்டை உடைத்துள்ளனர். அப்போது, எச்சரிக்கை மணி ஒலிக்கவே, மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கேஸ் கட்டர் மற்றும் உபகரணங்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

எச்சரிக்கை மணியின் ஒலியைக் கேட்டு வங்கி முன் திரண்ட கிராம மக்கள், வங்கி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். கொள்ளை முயற்சி குறித்து காவல் துறைக்கு வங்கிச் செயலாளர் ராமச்சந்திரன் தகவல் அளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.தர்மராஜன், கூடுதல் கண்காணிப்பாளர் தீபா கானேகர் அங்கு வந்து, ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால், பொது மக்கள் அடகு வைத்திருந்த, சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளும், வங்கியிலிருந்த பல லட்சம் பணமும் தப்பின. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x