Published : 25 Mar 2015 08:02 PM
Last Updated : 25 Mar 2015 08:02 PM
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கக் கோரி சட்டப்பேரவை வளாகத்தில் தேமுதிக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து அமைதி போராட்டம் நடத்தினர். இதற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
இது தொடர்பாக கட்சியின் கொறடா வி.எஸ்.சந்திரகுமார் கூறியதாவது: கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் தெரிவித்த கருத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரையும் அந்த கூட்டத் தொடரில் இருந்து வெளியேற்றுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு 2 கூட்டத் தொடர்களில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மற்ற எதிர்கட்சிகள் அனைத்தும் கேட்டுக்கொண்டதற்காக ஒரு கூட்டத் தொடரில் மட்டும் வெளியேற்றப்படுவர் என மாற்றப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்கூட தேமுதிக எம்எல்ஏக்கள் கலந்துக்கொள்ளக்கூடாது என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. வேளாண் அதிகாரி தற்கொலை, சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை தொடர்பான சந்தேகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தேமுதிக எம்எல்ஏக்களை பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எங்களை பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கக் கோரியும் தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து இங்கு அமைதியான வழியில் போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டாலின் ஆதரவு
பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக பொருளாளர் ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் குரல் எழுப்புவோம். சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலும் வலியுறுத்துவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT