Published : 13 Mar 2015 08:55 AM
Last Updated : 13 Mar 2015 08:55 AM
அதிமுக பொதுச்செயலாளர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் நீதி நிச்சயம் வெல்லும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி, “குற்றவாளிகள் மீது கூறப்பட்டுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் காட்டப்படவில்லை. எனவே, இதைப் பொய் வழக்கு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலைதான் நிலவுகிறது.
65க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை தேவை யில்லாமல் சுட்டிக்காட்டியும் கூட, 20 சதவிகித அளவுக்குக் கூட எதிர்த் தரப்பில் ஆதாரங்களோடு வாதாடவில்லை. அரசுத் தரப்பில் 259 சாட்சிகளின் வாக்குமூலமும், புகார்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2,341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பையே தானும் கொடுக்க வேண்டி வரும்” என்று கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அடுக்கடுக்காக எடுத்து கூறியுள்ளார்.
தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது. நீதி நிச்சயமாக வெல்லும். எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT