Published : 12 Mar 2015 08:59 AM
Last Updated : 12 Mar 2015 08:59 AM

புதிய தலைமுறை சேனல் அலுவலகம் மீது குண்டுவீசி தாக்குதல்

சென்னை - ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதமும் ஏற்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 3 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் இந்தச் செயலலில் ஈடுபட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசப்பட்டதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அப்பகுதியில் சுற்றித் திரிந்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், இருள் காரணமாக மர்ம நபர்கள் அடையாளம் தெளிவாக கேமராவில் பதிவாகவில்லை.

சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார், வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் வீசியது குறைந்த திறன் கொண்ட டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டு என தெரியவந்துள்ளது.

பின்னணி:

இந்தச் சேனலில், மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதியன்று 'பெண்களுக்கு தாலி தேவையா? இல்லையா?' என்ற தலைப்பில் சிறப்பு விவாதம் ஒளிபரப்புவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. நிகழ்ச்சியை தடை செய்யும்படி வலியுறுத்தின.

இந்நிலையில், மகளிர் தினத்தன்று காலை டி.வி. அலுவலகம் முன்பு பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடி, நிகழ்ச்சியை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அப்போது, அந்த டி.வி. சேனலில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன், போராட்டத்தை வீடியோவில் பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், அவரது கேமராவை பறித்து தரையில் வீசி உடைத்தனர். அவரையும் தாக்கினர். அப்போது அங்கே வந்த பெண் நிருபர் ஒருவரையும் போராட்டக்காரர்கள் தாக்க முயன்றனர்.

அதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்கள் 10 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தையடுத்து, குறிப்பிட்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் வீச்சு

தொலைக்காட்சி அலுவலகம் மீது அதிகாலை 3 மணியளவில் 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒரு குண்டு அலுவலகத்தின் உட்பகுதியிலும், மற்றொன்று நுழைவாயில் கேட் அருகிலும் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தன. அதிர்ஷ்டவசமாக குண்டு வெடிப்பில் யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. சத்தம் கேட்டு தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் வெளியே வந்து பார்த்தனர். பின்ன், கிண்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து சிதறிக் கிடந்த டிபன் பாக்ஸ் துண்டுகளையும், வெடிமருந்துகளையும் சேகரித்தனர். தொலைக்காட்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பைக்குகளில் வந்த 5 பேர் வெடிகுண்டுகளை வீசியது தெரிந்தது. அதை வைத்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்

இந்து இளைஞர் சேனா:

இதற்கிடையே, யாரும் எதிர்பாராத நிலையில் இந்து இளைஞர் சேனா என்ற அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெயம் பாண்டியன் என்பவர், மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ‘எனது அமைப்பைச் சேர்ந்தவர்கள், எனது உத்தரவின்பேரில்தான் தொலைக்காட்சி அலுவலகம் மீது வெடிகுண்டுகளை வீசினர்’ என்று அவர் தெரிவித்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஜெயம் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை பாண்டியன் நடத்தி வருவதும், டிராவல்ஸ் அலுவலகத்தையே இந்து இளைஞர் சேனா அமைப்பின் தலைமை அலுவலகமாக பயன்படுத்தி வருவதும் தெரிந்தது. தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டு வீசிய 5 பேர் அங்கே பதுங்கி இருப்பதும் தெரிந்தது.

மதுரையில் இருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கிண்டி போலீஸார் விரைந்து சென்று 5 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மகாதேவன்(27), திண்டுக்கல் முரளி(32), உசிலம்பட்டி சிவா(22), திருவண்ணாமலை சரவணன்(24), மதுரை வேணுகோபால்(29) என்பதும், ஜெயம் டிராவல்ஸ் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்வதும் தெரிந்தது. குண்டு வீச்சுக்கு பயன்படுத்திய 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. குண்டு தயாரிக்க உதவி செய்ததாக மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிராவல்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிமருந்துகள் மற்றும் வெடிப் பொருட்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். தொலைக்காட்சி நிறுவனத்தில் குண்டுவெடித்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெடிமருந்தும், இதுவும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்க ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x