Published : 18 Mar 2015 12:57 PM
Last Updated : 18 Mar 2015 12:57 PM

மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து 23-ம் தேதி பாமக போராட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் பாசனத்துக்காக காவிரி நீரை நம்பியுள்ள 14 மாவட்டங்கள் பாலைவனமாவதைத் தடுக்க முடியாது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும்.

எனவே, தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் மேகேதாட்டு அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும். கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னை மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் 23-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்த பாமக முடிவு செய்துள்ளது. சென்னையில் நடக்கும் போராட்டத்துக்கு பாமக இளைஞரணித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குவார்.

தஞ்சாவூரில் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையிலும், அரியலூரில் ஜெ.குரு எம்எல்ஏ தலைமையிலும் போராட்டம் நடக்கும். இதுதவிர சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x