Published : 23 Mar 2015 10:23 AM
Last Updated : 23 Mar 2015 10:23 AM
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காதபட்சத்தில், கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ‘ஜாக்டா’ நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘ஜாக்டா’ ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆசிரியப் பணியில் இருக்கிற 18 ஆசிரிய சங்கங்கள் ஒன்றாய் இணைந்து இந்த ‘ஜாக்டா’ அமைப்பை ஒருங்கிணைத்து இருக்கிறோம். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல் சமமான ஊதியம் தமிழக அரசின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தன்பங் களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
தமிழ்வழிக் கல்வி, சமச்சீர்க் கல்வி போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை அறிவிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள் சார்ந்து வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வருமென்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வராத பட்சத்தில் ‘ஜாக்டா’ சார்பாக சென்னையில் ஏப்ரல் 12-ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதென தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு இளமாறன் கூறினார். ‘ஜாக்டா’ நெறியாளர்கள் தயாளன், ஆ.சக்கரபாணி, தமிழக அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், கிப்சன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஜான்விஸ்லி உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT