Published : 10 Feb 2015 09:04 PM
Last Updated : 10 Feb 2015 09:04 PM
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை எரித்து, ஏழாவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் முடிவைக் கண்டித்து அக்கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 4-ம் தேதி முதல் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஏழாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் சாலையில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்போவதாகவும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மாணவர்களுக்கும், கல்லூரி முதல்வருக்கும் நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது.
கல்லூரி இடம் மாற்றப்படாது என்ற உறுதியான அறிவிப்பு வரும் வரையில், போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மாணவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT