Published : 14 Feb 2015 10:01 AM
Last Updated : 14 Feb 2015 10:01 AM

மதுரை சீர்திருத்தப் பள்ளியில் மோதல்: தப்பி ஓடிய 4 சிறுவர்கள் சிக்கினர் - 5 பேர் தொடர்ந்து தலைமறைவு

மதுரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற 9 சிறுவர்களில் 4 பேர் போலீஸாரிடம் சிக்கினர். அவர்கள் மீது புதிதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை காமராஜர் சாலையில் சிறுவர் சிறை (சீர்திருத்தப் பள்ளி) உள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து ஜன்னல் கம்பியை வளைத்து 2 சிறுவர்கள் வியாழக்கிழமை தப்பினர்.

இவர்களை கீழ்மதுரை அருகே போலீஸார் பிடித்து, மீண்டும் சிறுவர் சிறையில் அடைத்தனர். இதற்கு அங்கிருந்த மற்ற சிறுவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறை வளாகத்தில் இருந்த தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட பல பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் போர்வை உள்ளிட்ட துணிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து தெப்பக்குளம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் நேற்று அதிகாலையில் 9 சிறுவர்கள் தப்பினர். அவர்கள் போலீஸார் மணிகண்டன், ரபீக், வார்டன் பழனியப்பன் மற்றும் ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பினர். தெப்பக்குளம், கீழ்மதுரை உள்ளிட்ட பல இடங்களில் தேடியபோது நேற்று மதியம்வரை 4 பேர் சிக்கினர். மேலும் 5 பேரை சிறுவர்களின் சொந்த ஊர் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் தேடி வருகின்றனர்.

சிறை வளாகத்தை சேதப்படுத்தியது, போலீஸாரை தாக்கியது தொடர்பாக சிறுவர்கள் மீது புதிதாக 4 வழக்குகள் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

பிரச்சினையில் ஈடுபட்ட சிறுவர்கள் ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டு, அங்கு தகராறில் ஈடுபட்டதால் அண்மையில்தான் மதுரைக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x