Published : 07 Feb 2015 10:58 AM
Last Updated : 07 Feb 2015 10:58 AM

சென்னை நதிகளை பாதுகாக்க பாதுகாவலரை நியமிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றைப் பாதுகாக்க ஆறுகள் பாதுகாவலரை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் பி.எட்வின் வில்சன். இவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ‘‘சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை மாசடைந்து, வீட்டுக் கழிவுகள், தொழிற்சாலை ரசாயனக் கழிவுகளால் நிறைந்து கிடக்கின்றன. அவற்றின் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அந்த ஆறுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் கூறியிருந்தார்.

பசுமை தீர்ப்பாய தென்னிந்திய அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை சார்பில் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விவரங்கள் குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் விளக்கினர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கூவம் ஆறு தொடர்பான அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சில நிறுவனங்கள் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை கூவம் ஆற்றில் விடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, ‘‘சென்னையில் உள்ள ஆறுகளை பாதுகாக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாவலர் குழு சட்டத்தின்படி, சென்னை ஆறுகள் பாதுகாவலரை நியமிக்க வேண்டும்’’ என்று அமர்வு உறுப்பினர்கள் அரசுக்கு உத்தரவிட்டனர். சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆற்றில் விடும் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். மனு மீதான அடுத்தகட்ட விசாரணை மார்ச் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x