Published : 06 Feb 2015 04:19 PM
Last Updated : 06 Feb 2015 04:19 PM
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.
சட்டக் கல்லூரியை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் பிரதிநிதி வரும்வரை போராட்டம் நடைபெறும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களைத் தாக்கிய போலீஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு தன் ஆதரவை தெரிவித்தார். மாணவ, மாணவிகள் என பாராமல் போலீஸ் தடியடி நடத்தியதாக ஸ்டாலினிடம் புகார் கூறப்பட்டது.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
'' சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. கண்மூடித்தனமாக மாணவ, மாணவிகள் தாக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேச வலியுறுத்துகிறேன்.
அதிமுக ஆட்சியில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. மாணவர்களை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சட்ட மாணவர்கள் போராட்டத்துக்கு திமுக வழக்கறிஞர்கள் அணி துணை நிற்கும்.'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT