Last Updated : 01 Feb, 2015 12:19 PM

 

Published : 01 Feb 2015 12:19 PM
Last Updated : 01 Feb 2015 12:19 PM

தமிழகத்தால் மறக்கப்பட்ட ஓமந்தூரார்: வருத்தப்படும் வாரிசுகள்

தமிழகத்தின் முதல் முதல்வர் யார்? பலரையும் யோசிக்கவைக்கும் கேள்வி இது. சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் முதல்வராக செயல்பட்டவர்தான், விடுதலைக்குப் பிறகும், தமிழக முதல்வராக இருந்தார். அவர் காலத்தில்தான் தமிழக அரசின் சின்னம் உருவாக்கப்பட்டது. விழுப்புரம் அருகில் உள்ள ஓமந்தூரில் 1895-ல் பிறந்து, ஊர்ப் பெயரால் ‘ஓமந்தூரார்’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட ஓ.பி.ராமசாமிதான் அந்த பெருமைக்கு உரியவர்.

முதல்வராக இருந்தபோது ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஒருவரை திருப்பதி கோயிலுக்கு பொறுப்பாக நியமித்தார். இது சாதி, சமயம் தாண்டி மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணத்தின் வெளிப்பாடு. கடைசிவரை எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர்.

அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு, 60-வது பிறந்தநாளில் அவரது நலம் விரும்பிகள் அவருக்கு ரூ.60 ஆயிரம் பரிசுத் தொகை அளித்தனர். அந்த தொகையையும், ஓமந்தூரில் அவருக்கு இருந்த 256 ஏக்கர் பரம்பரை சொத்தையும் கொண்டு அறக்கட்டளை உருவாக்கி பொள்ளாச்சி மகாலிங்கத்தை தலைவராக நியமித்தார்.

ஓமந்தூராருக்கு பிள்ளைகள் இல்லை. அவரது உடன்பிறந்த 2 தம்பிகளில் ஒருவருக்கு மட்டும் 3 குழந்தைகள். அவர்களில் பத்ரிநாதன் பள்ளிப் படிப்போடும், ஸ்ரீனிவாசன் கல்லூரிப் படிப்போடும் இடைநின்றதால் சொந்த ஊரில் விவசாயம் செய்கின்றனர். மருந்தாளுநர் கல்வி முடித்த வெங்கடாசலபதி, சென்னையில் மருந்துக்கடை நடத்துகிறார்.

‘‘எங்கள் தாத்தா ஓமந்தூரார், தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் வருவதற்கும், தேவதாசி ஒழிப்புக்குமான நடவடிக்கைகளை எடுத்தவர். திமுக ஆட்சியில் கருணாநிதி எங்களை வீட்டுக்கு அழைத்துப் பேசினார். சென்னையில் உள்ள அரசினர் தோட்டத்துக்கு ஓமந்தூரார் பெயரைச் சூட்டியதும் அவர்தான். சமீபத்தில் விழுப்புரத்தில் ஓமந் தூரார் நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் அந்த மண்டபத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அந்த விழாவுக்கு, வாரிசுகளான எங்களை அழைக்காதது வருத்தம். தற்போது அவரது 120-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்’’ என்றார் வெங்கடாசலபதி.

சுதந்திரத்துக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார். காங்கிரஸும் ஓமந்தூராரை மறந்துவிட்டது என்று வருந்தும் வெங்கடாசலபதி, தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார்.

மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு ஓமந்தூரார் நினைவு தபால் தலை, தபால் உரை வெளியிட்டு கவுரவித்தது. அவரது அரசின் சாதனைகள், அரசியல் செயல்பாடுகளை பள்ளிப் புத்தகங்கள், அரசியல் அறிவியல் புத்தகங்களில் பாடமாகக் கொண்டுவர வேண்டும். முதல்வர்களின் முதல்வரான ஓமந்தூரார் பற்றி அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்கின்றனர் வாரிசுகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x