Published : 21 Feb 2015 08:53 AM
Last Updated : 21 Feb 2015 08:53 AM

ராமநாதபுரத்தில் கல்வீச்சில் நீதிபதி காயம் எதிரொலி: தமிழகத்தில் அனைத்து நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக காவல் துறை இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி எம்.பிரகாசன் வீடு மீது நேற்று முன்தினம் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நீதிபதிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து நீதிபதி வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்று நீதித் துறை. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கும், சட்டத்தின் ஆட்சியைப் பராமரிக்கவும் தேவையான அமைப்பு நீதித் துறை.

நீதிபதி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதிபதி காயம் அடைந்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான தகவலை உளவுத் துறை மற்றும் போலீஸார் முன்கூட்டியே பெற முடியாதது ஏன் என்று தெரியவில்லை.

நீதிமன்றம் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நீதிபதிக்கு பாதுகாப்பற்ற சூழல் இல்லாத நிலையில், தங்களது பாதுகாப்பு மற்றும் உரிமையை நிலை நாட்டுவதற்காக நீதிமன் றத்தை நாடும் பொதுமக்களின் நிலையை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

ராமநாதபுரம் நீதிபதிக்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் இருப்பது தெரிகிறது. எனவே, நீதிபதி வீடு மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் அனைத்து நீதிபதிகளுக்கும், குறிப்பாக முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மேலும், இவ்வழக்கு தொடர் பாக உள்துறை செயலர், காவல் துறை இயக்குநர், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மார்ச் 9-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x