Published : 24 Feb 2015 09:17 AM
Last Updated : 24 Feb 2015 09:17 AM

ரேஷனில் ‘அம்மா உப்பு’ மார்ச் 15-க்குள் விநியோகம்

தமிழகத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் ‘அம்மா உப்பு’ விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு உப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் காமராஜ் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் தென்னிந்திய உப்பு உற்பத்தியாளர்களுக்கான ‘இந்திய உப்பு உச்சி மாநாடு 2015’ நேற்று நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு உப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் காமராஜ் கூறியதாவது:

தமிழகம் உப்பு உற்பத்தியில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் உப்புகளில் 70 சதவீதம் அயோடின் சத்து உள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் மலை கிராமங்களில் அயோடின் சத்து இல்லாத உப்பு விற்பனை செய்யப் படுகிறது. இதனை தடுக்க தற்போது சோதனை அடிப் படையில் நீலகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அயோடின் சத்து உள்ள ‘அம்மா உப்பு’ விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தை வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அம்மா உப்பை ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களிலும் விற்பனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உலகளாவிய மேம்பட்ட ஊட்டச்சத்து மையத்தின் தெற்காசிய ஆலோசகர் ராஜன் சங்கர் பேசும்போது, ‘உப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா உள்ளது. உப்பு உற்பத்தியில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை இந்திய உப்பு உற்பத்தி யாளர்கள் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சத்தான உப்பு கிடைக்கும்” என்றார்.

இந்த மாநாட்டில் தென்னிந்தியாவில் உள்ள உப்பு உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். வரும் காலங்களில் உப்பு உற்பத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x