Published : 11 Feb 2015 11:35 AM
Last Updated : 11 Feb 2015 11:35 AM

தமிழக, இலங்கை மீனவர்கள் மார்ச் 5-ல் சென்னையில் பேச்சுவார்த்தை

தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தை, மார்ச் 5-ம் தேதி சென்னையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மீன் வளத்துறை செயலர் டாக்டர் விஜயக்குமார், மத்திய வெளியுறவுத்துறை இணைச்செயலர் சுசித்ரா துரைக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:

தமிழக அரசின் முயற்சியால் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தை ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி 27 மற்றும் மே 12-ல் சென்னை மற்றும் கொழும்பில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் மார்ச் 5-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள மீன்வளத்துறை ஆணையரகத்தில் நடைபெற உள்ளது. இதில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், மீன்வளத்துறைச் செயலர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் ஏற்கனவே கொழும்பு மற்றும் சென்னையில் பங்கேற்ற 13 மீனவர்கள் பங்கேற்பர். புதுவையிலிருந்து மீனவர் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் மீனவர்கள் அரசின் விருந்தினர்களாக அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்படுவர்.

இதில் பங்கேற்க உள்ள கொழும்பு மீனவர்களின் பட்டியலை மத்திய அரசு இலங்கையிடம் பேசி, தமிழக அரசுக்கு அளிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்திப் பகுதியில் பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கடத்தப்படுவது, படகுகள், வலைகள் பறிமுதல், சித்ரவதை போன்ற நடவடிக்கைகளை நிறுத்துவது, தமிழக, இலங்கை மீனவர் படகுகளை பரஸ்பரமாக விடுவித்தல், இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரமாக ஒப்புக்கொண்டு பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்க அனுமதி அளித்தல், மீன்வளப்பகுதியை சேதப் படுத்துவது தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல், கச்சத்தீவு குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 2008-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மீறாமல் இருப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தப்படும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x