Last Updated : 20 Feb, 2015 09:51 AM

 

Published : 20 Feb 2015 09:51 AM
Last Updated : 20 Feb 2015 09:51 AM

‘நாதஸ்வரம்’ தொடர் ஏப்ரலில் முடிகிறது- நேர்காணல்: ஸ்ரீத்திகா

‘நாதஸ்வரம்’ தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத் திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ரீ த்திகா. ‘நாதஸ்வரம்’ தொடர் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து காரைக்குடிக்கும், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு மாக மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.

‘நாதஸ்வரம்’ தொடர் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டதுபோல் தோன்றுகிறதே?

வருகிற ஏப்ரல் மாதத்தோடு இந்தத் தொடர் முடிகிறது. இதுவரை யில் தமிழில் எந்த தொடரிலும் செய்யாத விஷயமாக கடந்த 5 ஆண்டுகளாக இத்தொடரின் படப்பிடிப்பை காரைக்குடியிலேயே எடுத்துள்ளனர். நல்ல கதைச் சூழல், இயக்குநர், ரசிகர்களை கவரக்கூடிய கதாபாத்திரங்கள் என்று எல்லாம் சரியாக அமைந்தால்தான் ஒரு தொடர் தொடர்ச்சியாக நல்ல பெயர் வாங்க முடியும்.

‘மெட்டி ஒலி’ தொடருக்கு கிடைத்த வரவேற்போடு திருமுருகன் இந்த தொடரைக் கொண்டு போனார். இப்போது கிளைமாக்ஸ் நெருங்குகிறது என்று நினைக்கும்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகள் கண்முன் வந்துபோகின்றன.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘உயிர்மெய்’ தொடர் தொடங்கிய சில மாதங்களிலேயே முடிந்துவிட்டதே?

எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று தயாரிப்பு தரப்பினர்தான் சொல்ல முடியும். ‘கண்ணாமூச்சி ஏனடா’ படத்தை இயக்கிய பிரியா மேடம்தான் இதன் இயக்குநர். எனக்கு அதில் மருத்துவர் கதாபாத்திரம். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மருத்துவத்துறையில்தான் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்ட பெண் நான்.

அந்த தொடரில் அமலா நாகார்ஜூனா நடிக்கிறார் என்றதும் எந்தவிதமான யோசனையும் இல்லாமல் ஒப்புக்கொண்டு நடித்தேன். அவரிடம் இருந்து நிறைய பாசிடிவ் விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். 80-களில் பெரிய நட்சத்திரமாக திகழ்ந்தவர்.

ஹைதராபாத்தில் பெரும் செல் வந்தர் குடும்பம். அப்படி இருந்தும் அவர் ஷூட்டிங்கில் மிக எளிமையாக எங்களுடன் நடந்துகொண்டார். இந்தத் தொடர் முடிந்த தும் அமலா மேடம் உள்ளிட்ட அந்த குழுவோடு இனி பயணிக்க எப்போது வாய்ப்பு கிடைக்குமோ என்று ஏக்கமாக இருந்தது.

புதிதாக வேறு ஏதாவது தொடர்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறீர்களா?

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ‘நாதஸ்வரம்’ முடிந்தபிறகு அல்லது முடியும் தருணத்தில் அதைப்பற்றி யோசிக்கலாம் என்று இருக்கிறேன்.

சினிமாவில் அறிமுகமான நீங்கள், இப்போது அந்தப் பக்கம் திரும்புவதே இல்லையே?

சினிமா வேண்டாம் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை. ‘வெண்ணிலா கபடி குழு’, ‘மதுரை டூ தேனி’ படங்களை முடித்து அடுத்தடுத்து சில படங்களை ஒப்புக்கொண்ட நேரத்தில் ‘நாதஸ் வரம்’ வாய்ப்பு வந்தது. முதலில் வேண்டாம் என்றுதான் இருந்தேன். அக்கா சுதா அந்த நேரம் சின்னத்திரையில் பிஸியாக இருந்தார்.

“திருமுருகன் சாரின் தொடர் இது. சினிமா மாதிரிதான் இருக்கும்’’ என்று அக்கா கூறினார். நீண்ட யோசனைக்கு பின் ‘நாதஸ்வரம்’ தொடரில் நடிக்க சம்மதித்தேன். இந்த தொடரில் நடித்துக்கொண்டிருந்த போதும் ‘வேங்கை’ படத்தில் நடித்தேன்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத்தான் செய்கிறது. 20 நாள், 30 நாள் தொடர்ந்து கால்ஷீட் என்பதால்தான் தொடர முடிவதில்லை. அதனால் சில படங்களில் நடிக்கமுடியவில்லை. மனதுக்கு பிடித்த கதாபாத்திரம் வந்தால் நடிப்பேன்.

சின்னத்திரை தொடர்களில் பாசம், அழுகை, வில்லத்தனம் ஆகிய களத்தைத் தவிர வேறு எதையும் பெரிதாக காட்டுவதில்லை என்று கூறப்படுகிறதே?

முன்பு வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். தற்போது அப்படி இல்லை. சினிமா மாதிரியான பின்னணியிலேயே தொடர்களும் படமாக்கப்படுகின்றன. சினிமாவைப்போலவே, ரசிகர்களின் ரசனை மாற மாற சீரியல்களின் போக்கும் மாறவே செய்கிறது.

உங்கள் அக்கா சுதா இப்போதும் சின்னத்திரை பயணத்தை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறாரா?

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கும் நுழைந்தவள், திருமணம் முடிந்தும் நடிப்பை விட்டுக்கொடுப்பதாக இல்லை. குழந்தைப்பேறு காலத்தில்கூட சில மாதங்கள் மட்டும் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ‘பொன்னூஞ்சல்’ தொடரை முடித்துவிட்டு தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘திருமாங்கல்யம்’ தொடரில் நடித்து வருகிறாள்.

வீட்டில் திருமண பேச்சு எழுகிறதாமே. வருங்கால கணவர் பற்றிய கனவுகள் என்ன?

திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் போகக்கூடாது. அப்ப டியே போனாலும் 4, 5 வீடுகள் தாண்டி போக நான் விட மாட்டேன். அப்பா, அம்மா வீட்டில் எப்படி இருந்தேனோ அப்படி இருந்தால் போதும். ஒரு பெண் வேறென்ன பெரிதாக எதிர்பார்க்கப்போகிறாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x