Published : 21 Feb 2015 09:46 AM
Last Updated : 21 Feb 2015 09:46 AM

திருமயம் அருகே கார் - பஸ் மோதல் திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நேற்று நேரிட்ட சாலை விபத்தில் திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலர் பலியானார். திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ஆர்.சி.கணேசன்(43). ஏர்போர்ட் பகுதி திமுக செயலாளரான இவர், திருச்சி மாநகராட்சி 35-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வந்தார்.

காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து நேற்று காரில் திருச்சிக்கு புறப்பட்டார். காரை வெ.சாமுவேல்(35) ஓட்டியுள்ளார். திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, தஞ்சையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, கார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் அதே இடத்திலேயே இறந்தார்.

காயமடைந்த சாமுவேல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த கே.நல்லதம்பியை திருமயம் போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர்ட்டில் ஆஜராவதற்காக…

திருச்சி கோர்ட்டில் மத்திய சிறைக் காவலரைத் தாக்கிய வழக்கின் குறுக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் நேரு, அன்பழகன், ஆர்.சி.கணேசன் உட்பட 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராவதற்காக வேகமாக காரில் திருச்சி நோக்கி பயணித்தபோதுதான் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

ஆர்.சி.கணேசனுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். கணேசன் 2 முறை திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும், 2-வது முறையாக திருச்சி மாநகர திமுக ஏர்போர்ட் பகுதி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x