

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே பாக் நீரிணைக் கடற்பகுதியில் மண்டபம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சந்தியா ஜோசப் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர்.
மேலும், படகில் இருந்த அமோஸ்டின், ஜெனிடாஸ், ஜெபஸ்டின் ஆகிய 3 மீனவர்களைக் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டுசென்றனர். பின்னர் மீனவர்கள் அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மீனவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜன. 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுருப்பதாவது: ராமநாதபுரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தொடர்வதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கையில் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.