

தோடரின மக்களின் `மொற்பர்த்' பண்டிகையை முன்னிட்டு முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த ‘மூன் போ’ கோயிலில் வழிபட்டு, பாரம்பரிய நடனமாடிய கிராம மக்கள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், காட்டுநாயக்கர், பனியர், இருளர், குறும்பர் இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உடை, உணவு முறை, வழிபாட்டு முறை, திருமணம், இறப்பு என தங்களின் அனைத்து வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.
தோடரின மக்கள் ஊட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், தங்களுடைய மந்துகளில் வசிக்கின்றனர். இங்கு ‘மொற்பர்த்’ என்ற புத்தாண்டுப் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ கொண்டாடப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு ‘மொற்பர்த்’ பண்டிகை, தோடரின மக்கள் வசிக்கும் மந்துகளின் தலைமை மந்தான தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில், நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்து கொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த ‘மூன் போ’ மற்றும் ‘அடையாள் ஓவ்’ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கோயில் வளாகத்துக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதால், தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து மண்டியிட்டு வழிபாடு நடத்தினர். ஆண்கள் வழிபாடு நடத்தி முடிந்ததும், பெண்கள் கொண்டாட்டத்தில் இணைந்தனர். பின், தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடிய படி நடனமாடினர்.
இவர்களை தொடர்ந்து ஆண்கள் நடனமாடினர். பின்னர், இளைஞர்கள் இளவட்டக் கற்களை தூக்கி தங்கள் இளமையை நிரூபித்தனர். பின்னர், அனைவருக்கும் பிரத்யேக உணவு வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தோடரின மக்கள் தலைவர் மந்தேஸ் குட்டன், அடையாள்குட்டன், பீட்ராஜ், நார்தே குட்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.