Published : 15 Apr 2014 08:47 PM
Last Updated : 15 Apr 2014 08:47 PM

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை உயிருக்கு போராட்டம்: திருவண்ணாமலை அருகே சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஒன்றரை வயது குழந்தை செவ்வாய்க் கிழமை ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

40 அடி ஆழத்தில் தவித்துக் கொண்டிருக்கும் அந்த குழந்தையை மீட்க தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் கிடாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு. கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சூர்யா(4) மற்றும் ஒன்றரை வயது சுஜித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

மகன்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமியார் கோவிந்தம்மாள் ஆகியோர் செவ்வாய்கிழமை மாலை, தங்கள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர்.

மாமியார் கோவிந்தம்மாளிடம் 2 மகன்களையும் விட்டுவிட்டு, அருகிலேயே ஜெயலட்சுமி கீரை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது, ஜெயபாலன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தோண்டப்பட்டிருந்த 160 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் ஒன்றரை வயது குழந்தை சுஜித் தவறி விழுந்து விட்டான். அவனது அழுகுரல் கேட்டு, கோவிந்தம்மாள் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் ஓடிவந்து, மீட்க முயன்றனர். மேலும், கிராம மக்களும் விரைந்து வந்து குழந்தையை மீட்க முயற்சித்தனர். இருப்பினும் பலன் அளிக்கவில்லை.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த தீயணைப்பு துறையினர், ஆழ்துளை கிணற்றைச் சுற்றி 6 பொக்கலைன் இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணியை மேற்கொண்டனர். ஆட்சியர் ஞானசேகரன், காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும், மதுரை மற்றும் கோவையில் உள்ள மீட்புக் குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் களும் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெயந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர், 40 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆழ்துளை கிணறு அருகே, பொதுமக்கள் யாரும் நெருங் காதபடி, பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. 4 மணி நேரத்தில் சுமார் 20 அடிக்கு ஆழம் தோண்டப்பட்டுள்ளது.

குழந்தையை காப்பாற்ற தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதற்கிடையே நிலத்தின் உரிமை யாளரான ஜெயபாலனை கடலாடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x