Published : 07 Jan 2015 10:37 AM
Last Updated : 07 Jan 2015 10:37 AM

தமிழகத்தில் மாவட்டந்தோறும் வெளி மாநிலத்தவர் கணக்கெடுப்பு : பிப்ரவரி தொடங்கி நவம்பரில் முடிக்க திட்டம்

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலர் பலியானதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வெளி மாநிலத்தவர், தமிழகத்திலிருந்து வெளிமாநிலம், வெளிநாடு சென்றவர்கள் குறித்த சர்வே அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. வரும் நவம்பர் மாதத்துக்குள் ஆய்வை முடிக்குமாறு, தமிழக அரசின் பொதுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமானத் துறை, இனிப்பு வகைக் கடைகள், உணவு விடுதிகள், உணவகங்கள், மெக்கானிக் கடைகள் மற்றும் சலூன்கள் உட்பட பெரும்பாலான அமைப்பு சாராத் தொழில் சார்ந்தவற்றில், அதிக அளவு வெளி மாநிலத்தவர் பணியாற்றுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி தனியார் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டுமானப் பணியிலிருந்த வெளிமாநிலக் கட்டுமானத் தொழிலா ளர்கள் உட்பட 61 பேர் பலியாகினர்.

இதையடுத்து, கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய நலத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, தமிழக அரசு விசாரித்ததில் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் மாநில தொழிலாளர்கள் அதிக அளவில், தமிழகத்தில் பல்வேறு அமைப்புசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதல் விதிகளின்படி, வெளிமாநில, வெளிநாட்டினருக்கான நலத் திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் வசிக்கும், தங்கியிருந்து பணியாற்றும் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர், தமிழகத்திலிருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்தோர் குறித்த புள்ளி விவரங்களைத் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாக தமிழக பொதுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுத்துறை கட்டுப்பாட்டிலுள்ள வெளிநாட்டு அகதிகள் மற்றும் தமிழர் அல்லாத வெளிமாநிலத்தவர் நலத் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கேரளாவைப் பின்பற்றி

கேரளாவில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வெளிமாநிலத்தவர், வெளிநாடு, வெளிமாநிலம் சென் றோருக்கான புள்ளிவிவரக் கணக்கெ டுப்பு நடத்தப்படுகிறது. அதைப் போலவே தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்த முடிவாகியுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட வாரியாக, வீடு, வீடாகக் கணக்கெடுக்கப்படும். தமிழகத்தில் ஊர் வாரியாக, தாலுகா வாரியாக, மாவட்ட வாரியாக எவ்வளவு வெளிமாநிலத்தவர் தங்கியுள்ளனர், பணி செய்கின்றனர். அவர்களின் சொந்த மாநிலம் எது? அங்கிருந்து இங்கே இடம்பெயர்ந்து வர என்ன காரணம்? அவர்களுக்கான பணி, ஊதியம், தங்குமிடம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.

அவர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் இருப்பார்களா அல்லது தங்கள் மாநிலத்துக்கு சென்று விடுவார்களா என்ற விவரமும் சேகரிக்கப்படும்.

இதேபோல் தமிழகத்திலிருந்து வெளிமாநிலம், வெளிநாடு சென்றவர்கள் பெயர், சென்றுள்ள மாநிலம், நாடு விவரம், அங்கு அவர்களின் பணி, ஊதியம் குறித்த விவரம், தமிழகத்திலிருந்து அவர்கள் இடம்பெயர என்ன காரணம் என்றும் கண்டறியப்படும்.

ஆய்வில் தனியார் நிறுவனம்

மொழி வாரியாக, சாதி வாரியாக, மத ரீதியாக எவ்வளவு பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்ற விவரங்களையும், அதற்கான காரணங் களையும் சேகரிக்க திட்டமிடப்பட் டுள்ளது. இந்த ஆய்வுக்கு தனியார் ஆய்வு நிறுவனத்தை ஈடுபடுத்த உள்ளோம். வரும் பிப்ரவரி இறுதிக்குள் ஆய்வுப் பணிகளைத் தொடங்கி, ஒன்பது மாதங்களில் வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறிக்கை, தமிழக வெளிநாடு அகதிகள் மறுவாழ்வுத் துறை மூலம் தமிழக தலைமைச் செயலரிடம் சமர்ப்பிக்கப்படும், மேலும் மத்திய அயல்நாடு விவகாரத்துறை அமைச்சகத்திடமும் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x