Published : 08 Jan 2015 11:42 AM
Last Updated : 08 Jan 2015 11:42 AM

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: ரூ.500 முதல் ரூ.3,000 வரை கிடைக்கும்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.3,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒவ்வோர்ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதே போல வழங்க, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தர விட்டுள்ளார்.

ரூ.3000 உச்சவரம்பு

அதன்படி, 2013-14-ம் ஆண்டுக்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு, 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.

மேலும் ‘ஏ மற்றும் பி’ தொகுதி யைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதி யாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து, சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும், முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

இதேபோல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உதவி யாளர்கள், தினக்கூலி அடிப்படை யில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி, பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணிய மர்த்தப்பட்டவர்கள் ஆகியோ ருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு/அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு/ இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுவோர், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுவோர் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

ரூ.326 கோடி செலவு

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப் படும்.

இந்த அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் பண்டிகை போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க, அரசுக்கு 326 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு பெற யாருக்கு தகுதி?

தமிழக நிதித்துறை வெளியிட்ட அரசாணையில்,’ அனைத்திந்திய பணிகள் உள்பட மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி மன்ற அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும், 500 ரூபாய் பொங்கல் பரிசாக, ஓய்வூதியம் பெறும் நடைமுறையில் உடனடியாகக் கிடைக்கும்.

சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியர்களுக்கு இந்த பொங்கல் பரிசு பொருந்தாது. அரசு ஊழியர்களுக்கான மிகை ஊதியம் பட்டியலில், மாநில அரசிலிருந்து நிறுவனங்கள், வாரியங்கள் ஆகிய அயல்பணிக்கு மாற்றியோரும் இடம் பெறுவர். தினக்கூலியாக இருந்து பணி நிரந்தரம் பெற்றோருக்கும் 1,000 ரூபாய் மிகை ஊதியம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x