Published : 19 Jan 2015 09:54 AM
Last Updated : 19 Jan 2015 09:54 AM
தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக தமிழக பாஜகவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாட்களில் கட்சி வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல ஆடிட்டர் குருமூர்த்தி யின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்திருந்தார். திருமண நிகழ்ச்சி யில் பங்கேற்ற பின்னர், சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொடர் பான விவரங்களை அமித்ஷா கேட்டறிந்தார். இந்த ஆலோசனைக்கூட்டம் மதிய உணவு நேரத்தின் போது சுமார் அரை மணி நேரம் நடந்தது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், பாஜக தமிழக பொறுப் பாளர் முரளிதரராவ், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில அமைப்புச் செயலாளர் மோகன் ராஜுலு ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று பாஜக தலைவர்கள் அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, ஸ்ரீரங்கத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை எந்த அளவு உள்ளது? ஸ்ரீரங்கத்தில் வெற்றி வாய்ப்பு எப்படி? வேட்பாளராக யாரை பரிந்துரைக்கப் போகிறீர்கள்? என்று பல கேள்விகளை கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மாநில தலைவர்கள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திருச்சியைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோர் பெயரை கூறியுள்ளனர். மேலும் கூட்டணி கட்சியினருடனும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பேசவுள்ளதாக அமித் ஷாவிடம் கூறப்பட்டது.
இவற்றை கேட்டுக்கொண்ட அமித்ஷா, எல்லா வேலை களையும் முழுதாக முடித்து விட்டு தகவல் தெரிவிக்க சொல்லியுள்ளார். தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகளைச் சந்தித்து தங்களின் நிலைப்பாட்டை பாஜகவினர் கூறவுள்ளனர். ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பும், வேட்பாளர் பெயரும் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT