Published : 02 Apr 2014 12:00 AM
Last Updated : 02 Apr 2014 12:00 AM

ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தல்:அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அடுத்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் மனு தாக்கல் இல்லை.

இந்நிலையில், திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு ஆலந்தூரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஆர்.ராஜாராமிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ‘‘ஆலந்தூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’’ என்றார்.

அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், பகல் 1.45 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் காஞ்சி மேற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் காமராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். பின்னர் நிருபர்களிடம் வி.என்.பி.வெங்கட்ராமன் கூறுகையில், ‘‘முதல்வர் ஜெயலலிதா ஆதரவோடு 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்’’ என்றார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான பிரபல எழுத்தாளர் ஞாநி என்ற ஞாநி சங்கரன், பகல் 1.15 மணிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் பாஜக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் போட்டியிடுகிறார். அவர் இன்று மனு தாக்கல் செய்வார் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x