Published : 13 Jan 2015 08:23 AM
Last Updated : 13 Jan 2015 08:23 AM

கிரானைட் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட ஆள் இல்லா விமானம் நீரில் மூழ்கியது: ஆய்வுப் பணி பாதியில் நிறுத்தம்

கிரானைட் குவாரிகளில் சட்ட ஆணையர் உ.சகாயம் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வின்போது பயன்படுத்தப்பட்ட ஆள் இல்லா விமானம் பாறையில் மோதி நீரில் மூழ்கியதால் ஆய்வுப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து உ.சகாயம் 4-வது கட்டமாக ஆய்வு செய்துவருகிறார். கிரானைட் குவாரிகளால் விவசாயம், நீர்நிலைகள், புராதன சின்னங்கள் ஏராளமாக அழிக்கப்பட்டுள்ளன. மேலும் பல நூறு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களில் கிரானைட் வெட்டப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ளதால் 2 ஆண்டுகளாகியும் 23 குவாரிகளில் எவ்வளவு கற்கள் முறைகேடாக வெட்டப்பட்டுள்ளன என்பதைக் கணக்கிட முடியாத நிலை உள்ளது.

ஏற்கெனவே அதிகாரிகள் அளவீடு செய்ததிலும் குழப்பம் நிலவுகிறது. இந்த குவாரிகளில் சகாயம் பலமுறை ஆய்வு செய்தபோதும் முறைகேட்டின் அளவை சரியாக கணிக்க முடியவில்லை. இதனால் திங்கள்கிழமை முதல் ஆள் இல்லா விமானத்தை பயன்படுத்தி புள்ளிவிவரங்களை சேகரிக்க அவர் திட்டமிட்டார்.

நேற்று இடையபட்டியிலுள்ள பிஆர்பி குவாரியில் முதல்முறை யாக ஆள் இல்லா விமானத்தைப் பறக்கவிட்டு புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டது.

மதுரையை சேர்ந்த பார்த்தசாரதி, பூர்ணா குழுவினர் இந்த விமானத்தை இயக்கினர். 15 நிமிடங்களாக குவாரியை சுற்றி, 400 மீட்டருக்கும் மேல் உயரமாக பறந்தபடி பல கி.மீ. சுற்றளவுக்கு படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் குவாரிகளில் 300 அடிக்கும் மேல் தோண்டியுள்ளதை முழுமையாக படம் எடுக்க 2-ம் முறையாக ஆள் இல்லா விமானம் பறக்கவிடப்பட்டது. குறுகலான குவாரி பள்ளத்தில் நுழைந்த இந்த விமானம் சிறிய லேப் டாப்பில் கண்காணிக்கப்பட்ட படியே, ரிமோட்டால் இயக்கப் பட்டது. 150 அடிக்கும் கீழே பறந்த விமானத்தை மேலே எழுப்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக பாறையில் மோதி நீரில் விழுந்து மூழ்கியது.

இதனால் ஆய்வுப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. விமானத்தை மீட்க தீயணைப்புத் துறை உதவி கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் 3 வாகனங்களில் வந்தனர். 200 அடி தண்ணீருக்குள் மூழ்கிய விமானத்தை மாலை 5 மணிவரை முயன்றும் தீயணைப்பு வீரர்களால் மீட்க முடியவில்லை.

மதுரை அருகே மேலக்காலி லிருந்து வந்த குழுவினர் ஆக்ஜின் சிலிண்டரை பொருத்திக்கொண்டு தண்ணீருக்கடியில் சென்று விமானத்தை தேடி வருகின்றனர். விமானத்தை மீட்கும்வரை அப்பகுதியிலேயே இருப்பதாகக் கூறி சகாயம் முகாமிட்டிருந்தார்.

விமானம் விழுந்ததன் காரணம் என்ன?

விமானத்தை இயக்கிய பார்த்தசாரதி கூறுகையில், ஆய்வுப்பணிக்கு உதவும் வகையில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள இந்த விமானத்தை பயன்படுத்தினோம். இங்குள்ள பாறைகள் மிகக் கடினமாக வும், காந்தத் தன்மை மிக்கது மாக இருந்துள்ளன. அதிக ஆழத்தில், பாறைகளுக்கு நெருக்கமாக பறந்த விமானம் காந்தசக்தி ஈர்ப்பினால் ரிமோட் கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வராத நிலையில் பாறையில் மோதிவிட்டது. பல ஆண்டுகளாக இந்த விமானத்தை இயக்கிவரும் நிலையில், இதுபோன்ற விபத்து நடந்துள்ளது இதுவே முதல்முறை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x