Published : 11 Apr 2014 10:59 AM
Last Updated : 11 Apr 2014 10:59 AM

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களை கண்காணிக்க 3 சிறப்பு குழுக்கள்: தேர்தலுக்கு பிறகு அமைக்க முடிவு

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடுதலாக 3 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிரடி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ஆட்டோக்களுக்கான புதிய மீட்டர் கட்டணம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கிலோ மீட்டருக்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதிக கட்டணம் வசூலிக்கும் மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடக்கத்தில் 50 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. சுமார், 2,500 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், படிப்படியாக இந்த ஆட்டோக்கள் விடுவிக்கப்பட்டன.

இதற்கிடையே, இந்த சோதனை குழுக்களின் எண் ணிக்கை தற்போது குறைந்து வருவதால், ஆட்டோ கட்டண வசூல் மீண்டும் பழைய நிலைக்கே செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரியிடம் கேட்ட போது, ‘‘ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல், மீட்டர் பொருத்தாதது உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது புகார் அளிக்க 044-26744445, 044-24749001 ஆகிய எண்களும் அறிவிக்கப்பட்டன. மக்களும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். புகார் உறுதி செய்யப்பட்ட பின்னர், நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் சிலர் புகார் கொடுக்க அஞ்சுகிறார்கள். தற்போது ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணி காரணமாக வரும் 15-ம் தேதிக்கு பிறகு, மக்களவை தேர்தல் முடியும் வரையில் ஆட்டோக்கள் மீது சோதனை நடத்தப்படாது. தேர்தல் முடிந்த பிறகு, ஆட்டோக்கள் மீதான சோதனை தீவிரப்படுத்தப்படும். ஏற்கனவே இயங்கி வரும் 30 குழுக்கள் மூலம் பணிகள் தீவிரப்படுத்தப்படும். மேலும், கூடுதலாக 3 குழுக்களையும் நியமிக்கவுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x