Published : 19 Jan 2015 10:34 AM
Last Updated : 19 Jan 2015 10:34 AM

ஆடிட்டர் குருமூர்த்தி இல்ல திருமண விழா: அத்வானி, அமித் ஷா பங்கேற்பு

பிரபல ஆடிட்டரும் பத்திரிகையாளருமான எஸ்.குருமூர்த்தியின் இல்லத் திருமண விழா, சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

முன்னதாக நேற்று முன்தினம் மாலை பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு, அன்றிரவே டெல்லி திரும்பினர்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று முன்தினம் இரவே சென்னை வந்திருந்தார். அவர் நேற்று காலை 8.45 மணியளவில் திருமண மண்டபத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அனந்த பிரபு மற்றும் பாஜக மாநில நிர்வாகிகள் உட்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலை 10.40 மணியளவில் வந்தார். நேராக மணமேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு உடனடியாக சென்றுவிட்டார். அந்த நேரத்தில் அமித் ஷா உட்பட பாஜக தலைவர்கள் சாப்பிட சென்றிருந்தனர். அதனால், அவர்களை விஜயகாந்த் சந்திக்கவில்லை. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மணமக்களை வாழ்த்திவிட்டு, அமித் ஷாவையும் சந்தித்து பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அன்புமணி, ‘‘அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ரங்கம் இடைத்தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக கட்சிதான் முடிவு செய்யும். இது தொடர்பான முடிவுகளை ராமதாஸ் எடுப்பார்’’ என்றார்.

மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x