Last Updated : 12 Dec, 2014 10:52 AM

 

Published : 12 Dec 2014 10:52 AM
Last Updated : 12 Dec 2014 10:52 AM

மத்திய அரசு நடத்திய மின்சார சேமிப்புக்கான தேசிய ஓவியப் போட்டி: முதல் பரிசு வென்ற சென்னை மாணவன்

மின்சார சேமிப்பு குறித்து அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் சென்னை மாணவன் யோகரன் முதல் பரிசு வென்றுள்ளார். மத்திய மின்சார அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் மின்சார சேமிப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கிடையே ஓவியப் போட்டி நடத்துகிறது.

‘ஏ’ பிரிவில் 4, 5, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டியும், ‘பி’ பிரிவில் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டியும் நடத்தப்படுகிறது. இரண்டு பிரிவுகளுக்கும் தலா 3 தலைப்புகள் தரப்படும். மின்சார சேமிப்பு மற்றும் தூய்மை யான, பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து புதுமையான ஓவியத்தை வரைவதன் மூலம் புதிய விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வதுடன், நாட்டு நலனுக்காக புதிய விஷயங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த ஓவியப் போட்டியின் நோக்கமாகும்.

இப்போட்டியை முதல்கட்டமாக பள்ளிக்கூட முதல்வர் நடத்தி, இரண்டு பிரிவில் தலா இரண்டு சிறந்த ஓவியங்களைத் தேர்வு செய்து, அவற்றையும், அப்பள்ளியில் இரண்டு பிரிவுகளிலும் எத்தனை மாணவ, மாணவியர் பங்கேற்றனர் என்பது உள்ளிட்ட விவரங்களையும் இணைத்து அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேச ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு (Nodal Officer) அனுப்ப வேண்டும்.

அவற்றை நிபுணர் குழு ஆய்வு செய்து 50 சிறந்த ஓவியங்களைத் தேர்வு செய்யும். அவ்வாறு மாநிலப் போட்டிக்கு தேர்வாகும் 50 மாணவர்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி ஓரிடத்தில் நடத்தப்படும். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான ஓவியப் போட்டி கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்றது.

இதில் 6.8 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், சான்றிதழும் வழங்கப்பட்டது. ‘ஏ’ பிரிவில் மாநில அளவில் வெற்றிபெற்ற (முதல் 3 இடங்களைப் பிடித்த) 108 மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஓவியப் போட்டி டெல்லியில் இன்று (டிச.12) நடக்கிறது.

“பி” பிரிவில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களின் ஓவியங்கள் டெல்லிக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு, அவற்றை ஓவியர்கள் கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்து முதல் பரிசுக்கான மாணவனை தேர்வு செய்தது. அதன்படி, “மின்சார சேமிப்பு-2014”-க்கான அகில இந்திய ஓவியப் போட்டியில் சென்னை அண்ணாநகர் சின்மயா வித்யாலயா பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் ஏ.யோகரன் முதல் பரிசு பெற்றுள்ளார்.

“இப்போட்டியில் முதல்பரிசு பெற்ற ஓவியத்தை பரிசளிப்பு விழாவுக்கு முன்னதாக வெளியிடக்கூடாது” என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்ததாக யோகரனின் தாய் ஏ.கோமதி தெரிவித்தார். “ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட எனது மகன், சர்வதேச ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெறுவதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்” என்றார் அவரது தந்தை அரவிந்த். எரிசக்தி பாதுகாப்பு தினமான வரும் 14-ம் தேதி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில், தேசிய ஓவியப் போட்டியில் முதல்பரிசு வென்ற யோகரனுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x