Published : 06 Dec 2014 02:23 PM
Last Updated : 06 Dec 2014 02:23 PM

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினத்தில் நேற்று குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. நாகை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் முனுசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணி புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் சி.எஸ்.ஐ. பள்ளு, நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, தூய அந்தோனியார் பள்ளி, தேசிய மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

முன்னதாக, ஆட்சியர் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆட்சியர் முனுசாமி பேசுகையில், “குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பாமல், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்களில் பணியில் சேர்ப்பது சட்டப்படி குற்றமாகும். அவர்களை வேலைக்கு சேர்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம், ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க நேரிடும்” என்றார். இதில், வருவாய்க் கோட்டாட்சியர் சிவப்பிரியா, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, நகர்மன்றத் தலைவி மஞ்சுளா சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x