Last Updated : 15 Dec, 2014 01:17 PM

 

Published : 15 Dec 2014 01:17 PM
Last Updated : 15 Dec 2014 01:17 PM

சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் பெற ஆன்லைனில் மனுசெய்யும் வசதி விரைவில் அறிமுகம்

தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் சேர ஆன்லைனில் மனு செய்யும் வசதியும், 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி வசதியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

சமூக நலத்துறை சார்பில் 35.65 லட்சம் பேருக்கு, இந்திரா காந்தி தேசிய வயது முதிர்ந்தோர் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், விதவையர் திட்டம் உள்ளிட்ட 8 சமூக பாதுகாப்புத் திட்டங்களில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க, இரு புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் தகுதியற்ற பலரை பயனாளிகளாகச் சேர்த்துள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டு, அவர்களை நீக்கி வருகிறோம். ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக வெளியாகும் தகவல் தவறு. இத்திட்டங்களில் கடந்த ஜூன் முதல் 65 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் மனு செய்தால் நிச்சயம் ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும், 10 இலக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை தொடங்க உள்ளோம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதில் தொடர்பு கொண்டு விண்ணப்ப மனு எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மனு நிராகரிப்பு, ஓய்வூதியம் நிறுத்தம் ஆகியவற்றுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதனால் முதியோர், ஆதரவற்ற பெண்கள் தாலுகா அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும். இணைய வசதி இல்லாதவர்கள், பொது சேவை மையங்களுக்குச் சென்று இந்த வசதியை பெறலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x